ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கான கொடுப்பனவுகளை மாணவர்களுக்கு சிரமம் இல்லாத வகையிலும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கிடைக்கக்கூடிய வகையிலும் வழங்கும் வகையில் கொடுப்பனவுகள் மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு வைப்புச் செய்யப்படவுள்ளது.
அதேவேளை, தற்பொழுது மாதாந்த புலமைப்பரிசில் கொடுப்பனவாக வழங்கப்பட்டு வரும் 500 ரூபாவை 750 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை விடுத்துள்ளதாகவும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளுக்காக தொழில்நுட்ப உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறும் கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதே போன்று தரம் 13 வரையிலான கட்டாயக் கல்விசெயற்பாட்டின் கீழ் தொழில்நுட்ப கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கும் இதன் மூலம் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கான திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய தேசிய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் தகவல்கள், பரீட்சையில் பொற்றுக்கொண்ட புள்ளிகள் என்பவற்றை உள்ளடக்கி புலமைப்பரிசில் கொடுப்பனவிற்கு தகுதி பெற்ற மாணவர்களின் சகல தகவல்களும் Online முறையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் இது வரைகாலமும் தமக்கான கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொரு மாதமும் அதற்கான உறுதிச்சீட்டுகளை (Voucher) சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.
இதன் காரணமாக மாணவர்கள் இது வரைகாலமும் எதிர்கொள்ள நேர்ந்துள்ள பிரச்சினை மற்றும் தாமதங்கள் இந்த Online முறை மூலம் தீர்த்துவைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க புலமைப்பரிசிலுக்கான கொடுப்பனவு மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு வைப்பு செய்யப்படவுள்ளது. வருடந்தோறும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு சுமார் 350,000 மாணவர்கள் தோற்றி வருகின்றனர்.
இவர்களுள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 15,000 மாணவர்களுக்கு வருடாந்தம் புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்படுகின்றதோடு, புலமைப்பரிசில் கொடுப்பனவிற்காக அரசாங்கம் வருடாந்தம் 362 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்தும் வருகிறது.

No comments:
Post a Comment